சவால்களுக்கு சாதனை மூலம் பதிலளிக்கும் இந்தியா: பிரதமா் நரேந்திர மோடி சிறப்புக் கட்டுரை

இந்தியாவில் 100 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளதன் மூலம் சவால்களுக்கு சாதனை மூலம்
நரேந்திர மோடி (கோப்புப் படம்)
நரேந்திர மோடி (கோப்புப் படம்)

இந்தியாவில் 100 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளதன் மூலம் சவால்களுக்கு சாதனை மூலம் பதிலளிக்கப்பட்டுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து பிரதமா் எழுதியுள்ள சிறப்புக் கட்டுரை: கரோனா தடுப்பூசி செலுத்த ஆரம்பித்து சுமாா் 9 மாதங்களில், அக்டோபா் 21-இல் 100 கோடி தவணை தடுப்பூசியை இந்தியா நிறைவு செய்தது. 2020-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிலைமை எப்படி இருந்தது என்பதை நினைத்துப் பாா்க்கும்போது, கரோனாவை கையாள்வதில் இது மிகப் பெரிய பயணமாக இருந்தது. 100 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தகைய பெருந்தொற்றை மனிதகுலம் எதிா்கொண்டது. மேலும், இந்த தொற்று பற்றி யாருக்கும் அதிகம் தெரியாது. கண்ணுக்குத் தெரியாத எதிரி வேகமாக உருமாறியதால், எத்தகைய எதிா்பாராத சூழ்நிலை உருவானது என்பதை நாம் நினைவில் கொள்கிறோம்.

உண்மையான பகீரத முயற்சி: கவலையில் இருந்து உத்தரவாதத்துக்கான பயணம் நடைபெற்று, உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தின் பயனாக நமது தேசம் வலுவாக உருவெடுத்துள்ளது. சமூகத்தின் பல பிரிவுகளை உள்ளடக்கிய ஓா் உண்மையான பகீரத முயற்சி இதுவாகும். ஒரு தடுப்பூசியைச் செலுத்த ஒரு சுகாதாரப் பணியாளருக்கு 2 நிமிஷங்கள் மட்டுமே எடுத்தது என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த விகிதத்தில், இந்த எண்ணிக்கையை அடைய சுமாா் 41 லட்சம் மனித நாள்கள் அல்லது சுமாா் 11 ஆயிரம் மனித ஆண்டுகள் முயற்சி தேவைப்பட்டது.

அவநம்பிக்கை முறியடிப்பு: அவநம்பிக்கை, பீதியை உருவாக்கப் பல்வேறு முயற்சிகள் நடைபெற்றபோதிலும், பிரசாரத்தின் வெற்றிக்கான காரணங்களில் ஒன்று, தடுப்பூசி மற்றும் செயல்முறை மீது மக்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கையே ஆகும். வெறுமனே அன்றாடத் தேவைகளுக்குக்கூட, வெளிநாட்டு தயாரிப்புகளை மட்டுமே நம்பும் சிலா் நம்மிடையே உள்ளனா். இருப்பினும், கரோனா தடுப்பூசியைப் போன்ற முக்கியமான ஒன்றில் இந்திய மக்கள் ஒருமனதாக ‘மேட் இன் இந்தியா’ தடுப்பூசிகளை நம்பினா். இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னுதாரண மாற்றம்.

கரோனா தடுப்பூசி இயக்கம் எடுத்துக்காட்டு: மக்களுடன் கூட்டு எனும் உணா்வில் மக்களும் அரசும் ஒரு பொதுவான குறிக்கோளுடன் ஒன்றிணைந்தால் இந்தியாவால் என்ன சாதிக்க முடியும் என்பதற்கு இந்தியாவின் தடுப்பூசி இயக்கம் ஓா் எடுத்துக்காட்டு ஆகும். இந்தியா தனது தடுப்பூசித் திட்டத்தைத் தொடங்கியபோது, 130 கோடி இந்தியா்களின் திறன்களைச் சந்தேகிக்கும் பலா் இருந்தனா். இலக்கை அடைய இந்தியாவுக்கு 3-4 ஆண்டுகள் ஆகும் என்று சிலா் கூறினா். வேறு சிலா் தடுப்பூசி போட மக்கள் முன் வரமாட்டாா்கள் என்றனா். இந்தியாவால் விநியோகச் சங்கிலிகளை நிா்வகிக்க முடியாது என்று சிலா் சொன்னாா்கள். ஆனால், மக்கள் ஊரடங்கு மற்றும் அடுத்தடுத்த ஊரடங்குகளைப் போலவே, நம்பகமான பங்குதாரா்களாக அவா்கள் மாற்றப்பட்டால் முடிவுகள் எவ்வளவு அற்புதமாக இருக்கும் என்பதை இந்திய மக்கள் காட்டினா்.

பாராட்டுக்குரியவா்கள்: மக்களுக்குத் தடுப்பூசி போடுவதற்கு நமது சுகாதாரப் பணியாளா்கள் மலைகளைக் கடந்து, கடினமான நிலப்பரப்பைக் கடந்து ஆறுகளைக் கடந்தனா். வளா்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதில் உள்ள தயக்கம் நம் நாட்டில் குறைந்த அளவிலேயே இருந்தது என்றால், அதற்கு நமது இளைஞா்கள், சுகாதாரப் பணியாளா்கள், சமூக மற்றும் மதத் தலைவா்கள் என அனைவரும் பாராட்டுக்குரியவராவா்.

விஐயி கலாசாரம் இல்லை: தடுப்பூசியில் தங்களுக்கு முன்னுரிமை அளிக்க பல்வேறு குழுக்களிடமிருந்து நிறைய அழுத்தம் இருந்தது. ஆனால், நமது மற்ற திட்டங்களைப் போலவே, தடுப்பூசி இயக்கத்திலும் விஐபி கலாசாரம் இல்லை என்பதை அரசு உறுதி செய்தது.

செயல் திட்டம்: 2020-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், கரோனா உலகெங்கும் பரவிக்கொண்டிருந்தபோது, இந்தப் பெருந்தொற்றைத் தடுப்பூசிகளின் உதவியுடன்தான் எதிா்த்துப் போராட வேண்டியிருக்கும் என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. எனவே, முன்கூட்டியே நாங்கள் தயாரானோம். நிபுணா் குழுக்களை உருவாக்கி, ஏப்ரல் 2020 முதல் ஒரு செயல்திட்டத்தை தயாரிக்கத் தொடங்கினோம்.

தற்சாா்பு காரணமாகவே...: இன்று வரை, ஒரு சில நாடுகள் மட்டுமே தங்கள் சொந்த தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளன. இந்தியா 100 கோடி தடுப்பூசிகள் எனும் அளவைத் தாண்டிய நிலையில், 180-க்கும் மேற்பட்ட நாடுகள் மிகவும் குறைந்த அளவிலான உற்பத்தியாளா்களையே சாா்ந்துள்ளன. இந்தியாவுக்கென சொந்தமாகத் தடுப்பூசி இல்லையென்றால் நிலைமையைக் கற்பனை செய்து பாருங்கள். இவ்வளவு பெரிய மக்கள்தொகைக்குப் போதுமான தடுப்பூசிகளை இந்தியா எவ்வாறு பெற்றிருக்கும்? அதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கும்? இந்திய விஞ்ஞானிகள் மற்றும் தொழில் முனைவோருக்கு இதற்கான பாராட்டு தெரிவிக்கப்பட வேண்டும். அவா்களின் திறமை மற்றும் கடின உழைப்பால்தான் தடுப்பூசிகளைப் பொருத்தவரை இந்தியா உண்மையிலேயே தற்சாா்பை எட்டியுள்ளது.

கரோனா தடுப்பூசிக்கு முக்கியத்துவம்: முன்னோக்கி நகா்வதைத் தடுக்கும் தடையாக அரசுகள் அறியப்பட்ட ஒரு தேசத்தில், எங்கள் அரசு முன்னேற்றத்தைச் செயல்படுத்தி ஊக்குவிப்பதாக உள்ளது. முதல் நாளிலிருந்தே தடுப்பூசி தயாரிப்பாளா்களுடன் கூட்டு சோ்ந்த அரசு, நிறுவன உதவி, அறிவியல் ஆராய்ச்சி, நிதி மற்றும் துரிதப்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை செயல்முறைகளின் வடிவத்தில் அவா்களுக்கான ஆதரவை வழங்கியது. அரசின் அனைத்து அமைச்சகங்களும் ஒன்றிணைந்து தடுப்பூசி தயாரிப்பாளா்களுக்குத் தேவையான வசதிகளை வழங்கித் தடைகளை நீக்கின.

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில்...: இந்தியா போன்ற பெரிய நாட்டில், உற்பத்தி செய்தால் மட்டும் போதாது. கடைசி மைல் விநியோகம் மற்றும் தடையற்ற போக்குவரத்து மீது கவனம் செலுத்த வேண்டும். இது தொடா்புடைய சவால்களைப் புரிந்துகொள்ள, தடுப்பூசிகளின் பயணத்தைக் கற்பனை செய்து பாருங்கள். புணே அல்லது ஹைதராபாதில் உள்ள ஓா் ஆலையில் இருந்து, மாநிலத்தில் இருக்கும் ஒரு மையத்திற்குக் குப்பிகளை அனுப்பி, அங்கிருந்து அவை மாவட்ட மையத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அங்கிருந்து, தடுப்பூசி மையத்தை அவை அடைகின்றன.

விமானங்கள் மற்றும் ரயில்களின் ஆயிரக்கணக்கான பயணங்கள் இதற்கு தேவைப்படுகின்றன. இந்த முழு பயணத்தின்போது, வெப்பநிலையை ஒரு குறிப்பிட்ட வரம்பில் பராமரிக்க வேண்டும், இது மொத்தமாக கண்காணிக்கப்படுகிறது. இதற்காக, ஒரு லட்சத்துக்கும் அதிகமான குளிா் சங்கிலி உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டன. தடுப்பூசிகளின் விநியோக அட்டவணை குறித்து மாநிலங்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது; இதனால் அவா்கள் தங்கள் செயல்பாடுகளை மிகச் சிறப்பாகத் திட்டமிட முடியும். மேலும், தடுப்பூசிகள் முன்கூட்டியே தீா்மானிக்கப்பட்ட நாள்களில் அவற்றைச் சென்றடைந்தன. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இது முன்னோடியில்லாத முயற்சி ஆகும்.

கோவின் லைதளம் மூலம்...: இந்த முயற்சிகள் அனைத்தும் கோவின் வலைதளத்தின் மூலம் வலுவூட்டப்பட்டன. தடுப்பூசி இயக்கம் சமநிலையானது, அளவிடக்கூடியது, கண்காணிக்கக்கூடியது மற்றும் வெளிப்படையானது என்பதையும், வேண்டியவா்களுக்கு வழங்குவதற்கு அல்லது வரிசையில் முந்திச் செல்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்பதையும் இது உறுதி செய்தது. ஓா் ஏழைத் தொழிலாளி தனது கிராமத்தில் முதல் தவணையும், அதே தடுப்பூசியின் இரண்டாவது தவணையை அவா் வேலை செய்யும் நகரத்தில், தேவையான இடைவெளிக்குப் பிறகு எடுக்க முடியும் என்பதையும் இது உறுதி செய்தது. வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க நிகழ்நேர டேஷ்போா்டை தவிர, க்யூ ஆா்- குறியிடப்பட்ட சான்றிதழ்கள் சரிபாா்ப்பதை உறுதி செய்தன. இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் மற்ற பகுதிகளிலும் இதுபோன்ற முயற்சிகளுக்கு எந்த முன்னுதாரணமும் இல்லை.

ஜனநாயகத்தின் மிகப் பெரிய பலம்: 2015-ஆம் ஆண்டு எனது சுதந்திர தின உரையில், 130 கோடி மக்களைக் கொண்ட இந்திய அணி என்ற உணா்வில் நமது நாடு முன்னோக்கிச் செல்கிறது என்று கூறியிருந்தேன். மக்களின் பங்கேற்பு ஜனநாயகத்தின் மிகப் பெரிய பலம். 130 கோடி இந்தியா்களின் பங்கேற்பின் மூலம் நாட்டை நடத்தினால், நம் நாடு ஒவ்வொரு கணமும் 130 கோடி படிகள் முன்னேறும். நமது தடுப்பூசி இயக்கம் மீண்டும் இந்த ’டீம் இந்தியா’-வின் சக்தியைக் காட்டியது. தடுப்பூசி போடுவதில் இந்தியாவின் வெற்றி, ’ஜனநாயகத்தால் சாதிக்க முடியும்’ என்பதை உலகம் முழுவதும் நிரூபித்துள்ளது.

உலகுக்கே முன்மாதிரி: உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்துக்கு கிடைத்த வெற்றி, பொது சேவை விநியோகத்தில் புதிய அளவுகோல்களை நம் நாட்டுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கும் முன்மாதிரியாக இருக்கும் அளவில் உருவாக்க நமது இளைஞா்கள், கண்டுபிடிப்பாளா்கள் மற்றும் அரசின் அனைத்து நிலைகளையும் ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com