பொறியியல் படிப்புக்கு எப்போதுமே ஒரு தனிமவுசு உண்டு. ஆனால், பி.இ. எனப்படும் இளநிலை பொறியியல் படிப்புக்கு இருக்கும் மவுசு, ஏனோ தெரியவில்லை எம்.இ. எனப்படும் முதுநிலை பொறியியல் படிப்புக்குக் கிடைக்கவில்லை.
அதனால்தான், தமிழகத்தில் உள்ள பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் முதுநிலை பொறியியல் படிப்புகள் சிலவற்றை மூடுவதற்கு பொறியியல் கல்லூரிகள் அனுமதி கேட்டுள்ளன.
இதையும் படிக்க.. ரோட்டுக் கடையில் சாப்பிடுகிறவரா நீங்கள்? ஆபத்தை அறிந்துகொள்ள...
2022-23ஆம் கல்வியாண்டில், குறைந்தபட்சம் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 16 பொறியியல் கல்லூரிகள், எம்.பி. முதுநிலை பட்டப்படிப்பில் பல்வேறு பிரிவுகளை மூடுவதற்கு அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளன.
அதற்குக் காரணம் கடந்த கல்வியாண்டில் மட்டும் எம்.இ. மற்றும் எம்.டெக். படிப்புகளில் அண்ணா பல்கலைக்கழகத்திலும், அதன் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளிலும் 85 சதவீத மாணவர் சேர்க்கை இடங்கள் காலியாகவே இருந்தன.
எம்.இ. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டிரைவ்ஸ், பவர் சிஸ்டம் எஞ்ஜினியரிங், அப்லைடு எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பாடப்பிரிவுகளை மூட அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இவை முற்றிலும் வழக்கொழிந்துபோய்விட்டதாக அரசு பொறியியல் கல்லூரியிலிருந்து ஓய்வுபெற்ற பேராசிரியர் கே. செந்தில் தெரிவித்துள்ளார். இதுபோன்ற பாடப்பிரிவுகளிலிருக்கும் 204 மாணவர் சேர்க்கை இடங்கள் ரத்தாகவிருக்கின்றன.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், பொறியியல் படிப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பொறியியல் படிப்புக்கு அதிகம் பேர் விண்ணப்பிப்பார்கள். அந்த படிப்பை முடித்து வெளியே வரும் பொறியாளர்களுக்கு உடனடியாக நல்ல வேலை கிடைத்து விடுகிறது. எனவே, அவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் முதுநிலை பொறியியல் படிக்காமல் தவறவிடுவிடுகிறார்கள் என்கிறார் ஒரு பொறியியல் கல்லூரியின் தலைமை பேராசிரியர் சஷிதரன்.
இந்தக் கல்வியாண்டில் ஒட்டுமொத்தமாக 10 ஆயிரம் முதுநிலை பொறியியல் மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன. ஆனால், வெறும் 3,073 மாணவர்கள் மட்டுமே முதுநிலை பொறியியலுக்கு விண்ணப்பித்தனர். அவர்களில் 1,659 பேருக்கு மட்டுமே சேர்க்கை கிடைத்துள்ளது. இதைக்காட்டிலும் கடந்த கல்வியாண்டில் 2,106 பேர் முதுநிலை பொறியியலில் சேர்ந்துள்ளனர்.
அதேவேளையில், முதுநிலை கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் படிப்புக்கு அதிக வரவேற்பு இருப்பதால், புதிதாக நான்கு கல்லூரிகள் அந்தப் பாடப்பிரிவைத் தொடங்க அனுமதி கேட்டுள்ளன. இதன் மூலம் வரும் கல்வியாண்டில் எம்சிஏ மாணவர் சேர்க்கை இடங்கள் 330 ஆக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.