சப்தமில்லாமல் நுழையும் நுழைவுத் தேர்வு: மீண்டும் தலையெடுக்குமா தனியார் பயிற்சி மையங்கள்?

மத்திய பல்கலைக்கழக இளநிலைப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்திருப்பது மேலும் கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது.
மீண்டும் தலையெடுக்குமா தனியார் பயிற்சி மையங்கள்?
மீண்டும் தலையெடுக்குமா தனியார் பயிற்சி மையங்கள்?

ஏற்கனவே மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை தமிழக அரசு எதிர்த்து வரும் நிலையில், தற்போது மத்திய பல்கலைக்கழக இளநிலைப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்திருப்பது மேலும் கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது.

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தோ்வு ஜூலையில் நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.

கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இனி பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்றும், பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படாது என்றும் பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பினால், ஏழை மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி என்பது எட்டாக்கனியாக மாறிவிடவும், தனியார் பயிற்சி மையங்கள் தலையெடுக்கவும் காரணமாகிவிடக் கூடும் என்று கல்வியாளர்கள் கருதுகிறார்கள்.

நுழைவுத் தேர்வு தொடா்பாக யுஜிசி தலைவா் ஜக்தீஷ் குமாா்  கூறுகையில், ‘‘2022-23-ஆம் கல்வியாண்டு முதல் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தோ்வை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) நடத்தவுள்ளது.

என்சிஇஆா்டி பாடத் திட்டத்தின் அடிப்படையில் நுழைவுத் தோ்வு நடத்தப்படும். அத்தோ்வில் மாணவா்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே இளநிலைப் படிப்புகளில் சோ்த்துக் கொள்ளப்படுவா். பிளஸ் 2 மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, மத்தியப் பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம், நாட்டில் உள்ள 45 மத்தியப் பல்கலைக்கழகங்களில் இளநிலை பயில விரும்புவோர் நிச்சயம் இந்த நுழைவுத் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டியது அவசியமாகிறது. அதாவத, அவர்கள் பனிரெண்டாம் வகுப்பில் என்ன படித்தார்களோ, எத்தனை மதிப்பெண் பெற்றார்களோ அதைப் பற்றி கவலையில்லை. அதற்கு எந்த மதிப்பும் இல்லை. நீட் போலவே, இந்த சியுஇடி தேர்வும், மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களின் உயர்கல்விக்கு மற்றுமொரு தடைக்கல்லாக மாறவிருக்கிறது என்று தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்க நிர்வாகி பி.கே. இளமாறன் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற நுழைவுத் தேர்வுகளால், பல பள்ளிகளே தனியார் பயிற்சி மையங்களைப் போல செயல்படத் தொடங்கிவிடும். மாணவர்களின் கல்வியின் மீது கவனம் செலுத்தாமல், நுழைவுத் தேர்வுக்கான அழுத்தத்தைக் கொடுக்கத் தொடங்கிவிடும். இதுபோன்ற பள்ளிகளிலும், தனியார் பயிற்சி மையங்களுக்கும் சென்று பயில முடியாத ஏழை மாணவர்களின் உயர்கல்விக் கனவு கானல் நீராகிவிடும் என்கிறார் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி. 

மேலும், பல்கலைக்கழகத்தின் 85 சதவீத மாணவர் சேர்க்கையை மாநில அரசுகளும் 15 சதவீத மாணவர் சேர்க்கையை மத்திய அரசும் நிரப்பிக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.

ஆனால், இந்த நுழைவுத் தேர்வுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களோ, பல கிராமப்புற மாணவர்களுக்கு மத்தியப் பல்கலைக்கழகங்கள் குறித்து தெரிவதே இல்லை. அப்படியே தெரிந்திருந்தாலும், அங்கு மாணவர் சேர்க்கைக்கான கட்-ஆஃப் மதிப்பெண் அதிகமாக இருக்கும் என்பதால், அந்த கனவையே அவர்கள் காண்பதில்லை. எனவே அந்த நிலையை இந்த நுழைவுத் தேர்வுகள் அகற்றும் என்கிறார் அரசுக் கல்லூரியின் ஓய்வு பெற்ற தலைமை பேராசிரியர் கே. பிரசாந்த்.

நுழைவுத் தேர்வு குறித்து பேசிய சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் எஸ்பி தியாகராஜன் தனது கருத்தை இவ்வாறு வலியுறுத்துகிறார், மத்தியப் பல்கலைக்கழகத்தில் கலை, அறிவியல் மற்றும் இதர படிப்புகள் உள்ளன. அனைத்துக்கும் சேர்த்து எவ்வாறு ஒரே ஒரு நுழைவுத் தேர்வை நடத்துவார்கள் என்று பார்க்க ஆவலாக இருக்கிறேன். இவ்வாறு நுழைவுத்தேர்வை நடத்துவதற்கு பதிலாக, மத்திய, மாநில அரசுகள் இணைந்து பள்ளிக் கல்வியை மேம்படுத்தலாம் ஏற்படுத்தலாம் என்கிறார்.

நுழைவுத் தேர்வு குறித்த அறிவிப்பில், 

2022-23-ஆம் கல்வியாண்டுக்கான பொது நுழைவுத் தோ்வு ஜூலை முதல் வாரத்தில் நடத்தப்படும். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் தோ்வு நடத்தப்படும். அனைத்து மாநிலங்களிலும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிந்துவிடும் என்பதால் ஜூலை மாதத்தில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப முறைகள் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கிவிடும்.

இந்த தேர்வு கணினியில் விடைகளை தேர்வு செய்யும் முறையில் நடத்தப்படும். இந்த தேர்வை எழுத மாணவர்களுக்கு கணினியில் புலமை பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை.  

பொது நுழைவுத் தோ்வு இடஒதுக்கீட்டுக் கொள்கையில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

மாணவா் சோ்க்கைக்காக பொதுவான கலந்தாய்வும் நடத்தப்படாது. நுழைவுத் தோ்வில் மாணவா்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் என்டிஏ தகுதிப் பட்டியலை வெளியிடும். அதனடிப்படையில் பல்கலைக்கழகங்கள் மாணவா் சோ்க்கையை நடத்திக் கொள்ளலாம். வேண்டுமானால், மாநில, தனியாா் பல்கலைக்கழகங்களும் பொது நுழைவுத் தோ்வின் அடிப்படையில் மாணவா் சோ்க்கையை நடத்தலாம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த பொது நுழைவுத் தேர்வின் மூலம், மாணவர்கள் வெறுமனே பனிரெண்டாம் வகுப்பில் நல்லமதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக மட்டும் படிக்காமல், பல விஷயங்களை அறிந்து கொள்ளும் வகையில் படிக்கத் தொடங்குவார்கள்.

தேசிய தேர்வு முகமையே இந்த தேர்வையும் நடத்தும். ஒரே நாடு ஒரே பொது நுழைவுத் தேர்வு என்பது மாணவர்களுக்கு மிகப்பெரிய அளவில் நிம்மதியை அளிக்கும்.  இதனால் மாணவர்கள் பல்வேறு கல்லூரிகளில் சேர பல நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டிய அவசியம் இருக்காது என்றும் கூறியுள்ளார்.

பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதியுதவியின் கீழ் 45 மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com