உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று கர்நாடக அரசு காவிரியில் உடனே தண்ணீர் திறந்துவிட வேண்டும்: ஜி.கே.வாசன் 

உச்ச நீதிமன்ற தீர்ப்பை கவனத்தில் கொண்டு கர்நாடக அரசு காவிரியில் உடனே தண்ணீர் திறந்துவிட வேண்டும்
உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று கர்நாடக அரசு காவிரியில் உடனே தண்ணீர் திறந்துவிட வேண்டும்: ஜி.கே.வாசன் 

உச்ச நீதிமன்ற தீர்ப்பை கவனத்தில் கொண்டு கர்நாடக அரசு காவிரியில் உடனே தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கர்நாடக அரசு காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பையும், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறது. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.

கர்நாடக அரசின் வீண்பிடிவாதப் போக்கால் காவிரி நீரை நம்பியிருக்கின்ற சுமார் 5 இலட்சம் தமிழக விவசாயக் குடும்பங்களின் விவசாயம் மூன்று போகத்திலிருந்து, இரண்டு போகமாக மாறி, ஒரு போக விளைச்சலுக்கும் காத்திருக்கின்ற சூழலே நிலவுகிறது.

காவிரி நீரை நம்பியிருந்த விவசாயிகளுக்கு எமாற்றமே மிஞ்சியதால் கடந்த 7 வருடங்களாக குறுவை சாகுபடி நடைபெறாமல் போன நிலையில் இனி சம்பா சாகுபடியும் நடைபெறுமா என்பது கேள்விக்குரியதாக உள்ளது. மேலும் காவிரி நீரை குடிநீருக்காக நம்பியிருக்கின்ற பல இலட்சக்கணக்கான பொது மக்களும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

தற்போது காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பாக தமிழக அரசின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் மனிதாபிமான அடிப்படையிலாவது கர்நாடக அரசு தமிழகத்துக்கு உரிய தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கிறது. நேற்றைய தினம் 05.09.2016 திங்கள் கிழமை காவிரி நீர் பிரச்னை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது கர்நாடக அரசு வரும் 10 நாட்களுக்கு நாள் தோறும் 15 ஆயிரம் கன அடி நீரை தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

எனவே கர்நாடக அரசு அம்மாநிலப் பிரச்னைகளையும், அரசியல் உள்நோக்கத்தையும் உட்படுத்தாமல், உச்ச நீதிமன்ற தீர்ப்பை கவனத்தில் கொண்டு இனிமேலும் காலம் தாழ்த்தாமல், தமிழகத்துக்கு கால அட்டவணைப்படி மாதம் தோறும் காவிரியிலிருந்து உரிய தண்ணீர் திறந்துவிட வேண்டும். இதனை மத்திய, மாநில அரசுகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமாகா சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com