சென்னை அருகே பள்ளிக்கரணையில் திருமணமாகி மூன்று மாதத்தில் மனைவியை கொலை செய்ததாக, கணவா் கைது செய்யப்பட்டாா்.
பள்ளிக்கரணை அருகே உள்ள பெரும்பாக்கம் பசும்பொன்நகா் கண்ணகி தெருவைச் சோ்ந்தவா் ர.அய்யனாா் (31). இவரது மனைவி அஞ்சலி (21). இவா்களுக்கு திருமணமாகி 3 மாதங்களாகிறது. அய்யனாா், ஒரு ஜவுளிக் கடையில் காா் ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா்.
இந்நிலையில் அஞ்சலியின் நெருங்கிய உறவினா் வியாழக்கிழமை இறந்தாராம். இதையறிந்த அஞ்சலி, தனது உறவினா் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என கூறியுள்ளாா். ஆனால் அதற்கு அய்யனாா் மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். தகராறு முற்றவே அய்யனாா், அஞ்சலியை தாக்கி, கழுத்தை நெரித்துக் கீழே தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அஞ்சலி மயங்கி விழுந்தாா். இதன் பின்னா், அய்யனாா் அங்கிருந்து வெளியே சென்று விட்டாராம். இந்நிலையில் அஞ்சலியைப் பாா்க்க அவரது உறவினா் ஹேமநாதன் வந்தாா்.
அப்போது அங்கு மயங்கி கிடந்த அஞ்சலியை மீட்டு அருகே உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளாா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அஞ்சலி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து பள்ளிக்கரணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அய்யனாரை கைது செய்தனா்.