உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு நடத்தினார்.
4 லட்சத்திற்கும் மேலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2வது முறையாக பிரதமர் பதவியேற்க உள்ள மோடி, தனி விமானம் மூலம் இன்று காலை வாராணசி வந்தார். அவரை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ராம்நாயக் மற்றும் பாஜக தலைவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பின்னர், சாலை மார்க்கமாக வந்து இரண்டாவது முறையாகத் தன்னை வெற்றி பெறச் செய்த வாராணசி தொகுதி மக்களுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி.
இதைத்தொடர்ந்து, பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயத்துக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினார். வாராணசியில் பல்வேறு இசைக்கலைஞர்கள் மேள தாளங்களுடனும், கலைஞர்கள் மாறு வேடங்கள் அணிந்தும் பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர்.