திருமணமான 5 நாட்களில் கணவரது வீட்டில் வாழச் சென்ற புதுமணப்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள விவேகானந்தர் தெரு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் சேதுபதி இவரது மனைவி சிவசக்தி. இவர்களுக்கு கடந்த 5 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தேறியிருக்கிறது.
திருமணமான உடனேயே மணமகன் வீட்டின் மாடியில் உள்ள அறையில் சேதுபதியும், அவரது புது மனைவி சிவசக்தியும் தங்களது மண வாழ்வைத் துவங்கினர். வீட்டின் கீழ் போர்ஷனில் சேதுபதியின் தாய், தந்தை வசித்தனர். இந்நிலையில் அலுவல் காரணமாக சேதுபதி நேற்று மாலை வீட்டை விட்டு வெளியில் சென்றிருந்த நிலையில் மாடியில் இருந்த சிவசக்தி நீண்ட நேரமாகியும் கீழ்தளத்தில் உள்ள மாமியார், மாமனாரைக் காண வராததாலும், மேல் தளம் அமைதியாக இருந்த காரணத்தாலும், மருமகளைக் காண மாடிக்குச் சென்றார் சேதுபதியின் தாயார்.
அப்போது மாடி அறையில் அவர் கண்ட காட்சியில் விக்கித்துப்போனார். அங்கே திருமணமாகி 5 நாட்களான நிலையில் புது மருமகள் தனது துப்பட்டாவால் கழுத்தை இறுக்கிக் கொண்டு தூக்கில் தொங்கியிருக்கிறார். இதைக் கண்டு அலறிய மாமியார் புஷ்பவள்ளி கதறி அழுது கொண்டு தன் கணவரிடம் ஓடியிருக்கிறார். இவரது அழுகைச் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள காவல்நிலையத்தில் சிவசக்தியின் மரணம் குறித்து புகார் அளிக்கவே சம்பவ இடத்துக்கு விரைந்தனர் போலீஸார்.
ஆரம்ப கட்ட விசாரணையில் சிவசக்தியின் மரணம் தற்கொலை தான் எனத் தெரியவந்துள்ளது. ஆனால், அவர் எதற்காகத் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. உண்மையைக் கண்டறிய போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான 5 நாட்களில் புதுமணப்பெண் இப்படி ஒரு முடிவெடுத்தது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.