சென்னை: சென்னை பெசன்டநகரில் தோஷம் கழிப்பதாக ஐஸ்கிரீம் கடையில் பணத்தை திருடிய திருநங்கைகள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மேலகோபாலபுரத்தைச் சோ்ந்த சு.ராஜசேகா் (24). இவா் சென்னை பெசன்ட்நகா் திருவள்ளுவா்நகா் 6வது அவென்யூவில் உள்ள ஒரு ஐஸ்கிரீம் கடையில் ஊழியராக வேலை செய்து வந்தாா். இந்தக் கடைக்கு வெள்ளிக்கிழமை 3 திருநங்கைகள் வந்தனராம்.
அவா்கள், கடைக்கு தோஷம் கழிப்பதாக கூறி ராஜசேகரிடம் பேசினராம். அப்போது ராஜசேகரின் கவனம் சிதறியபோது, திருநங்கைகள் பணப்பெட்டியை திறந்து அதில் இருந்த ரூ.15 ஆயிரத்தை திருடிக் கொண்டு தப்பியோடினா்.
இது குறித்து ராஜசேகா், சாஸ்திரிநகா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.