தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகள் மூலம் கரோனா கால உதவித் தொகையும் நிவாரணப் பொருள்களின் விநியோகமும் வியாழக்கிழமை தொடங்கியது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த பணம் - பொருள் விநியோகத்தைத் தமிழக அமைச்சர்கள் தொடக்கி வைத்தனர்.
நியாயவிலைக் கடைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் மக்கள் இடைவெளிவிட்டு நின்று பொருள்களை வாங்கிச் செல்கின்றனர்.
யார் யாருக்கு 1000 ரூபாய்?
அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் மற்றும் இலங்கை அகதி முகாம்களில் இருப்போருக்கும் கரோனா வைரஸ் நிவாரண நிதியாக ரூ. 1,000 பணமும் அரிசி, பருப்பு, பாமாயில் எண்ணெய், சர்க்கரை ஆகியவையும் இலவசமாக வழங்கப்படும்.
சர்க்கரை மட்டும் வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 பணம் மட்டும் வழங்கப்படாது. ஆனால், மற்ற பொருள்கள் இலவசமாக வழங்கப்படும்.
ஏற்கெனவே, பொருள்கள் எதுவும் வேண்டாம் என்று அறிவித்து, முகவரிக்காக மட்டும் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு பணம், பொருள்கள் எதுவும் வழங்கப்பட மாட்டாது.
பணமோ, பொருள்களோ பெற விரும்பாதவர்கள், பொது விநியோகத் திட்ட இணையதளத்துக்குச் சென்றோ, அல்லது செல்லிடப்பேசி ஆப்பிலோ அதைப் பதிவு செய்யலாம். பதிவு செய்தால் இவர்களுக்கான விநியோகம் நிறுத்தப்படும்.
மார்ச் மாதத்துக்கான பொருள்களை வாங்காதவர்கள், அவற்றையும் சேர்த்து ஏப்ரல் மாதப் பொருள்களுடன் வாங்கிக் கொள்ளலாம் என்றும் அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.