கரோனா கால ஊரடங்கு காரணமாகத் தொழிற்சாலைகள் எல்லாம் மூடப்பட்டுள்ள நிலையில், மக்களும் அசுத்தப்படுத்தாததால் கங்கை நதி இப்போது மிகவும் சுத்தமாகக் காட்சியளிக்கிறது.
கங்கையாற்றின் மாசுபாட்டில் பத்தில் ஒரு பங்கு தொழிற்சாலைகளால்தான் ஏற்படுகிறது. ஊரடங்கு காரணமாகத் தொழிற்சாலைகள் மூடியிருப்பதால் நிலைமை மேம்பட்டுள்ளது. கங்கையின் நிலைமையில் 40 முதல் 50 சதவிகிதம் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று பனாரஸ் ஹிந்துப் பல்கலை. பேராசிரியர் முனைவர் பி.கே. மிஷ்ரா குறிப்பிட்டுள்ளார்.
மார்ச் 15, 16 தேதிகளில் பெய்த மழை காரணமாக கங்கையில் வெள்ளமும் பெருகியுள்ளதால் அதனுடைய சுத்தமாகும் திறனும் கணிசமான அளவுக்கு முன்னேறியுள்ளது.
ஊரடங்கு காலத்துக்கு முன்னிருந்த நிலையுடன் ஒப்பிட, தற்போது நிலைமை பெருமளவுக்கு மேம்பட்டுள்ளது.
கங்கையில் இப்போது செல்லும் தண்ணீருக்கும் ஏற்கெனவே சென்றுகொண்டிருந்த தண்ணீருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. படித்துறைகளில் மக்களும் அவ்வளவாகக் குளிப்பதில்லை. இதே நிலை இன்னமும் 10 நாள்களுக்கு நீடித்தால் பழைய கங்கையே கிடைத்துவிடும் என்று உள்ளூர்க்காரர் ஒருவர் குறிப்பிடுகிறார்.