மும்பையின் பொதுக் கழிப்பிடங்களில் ஒரு கழிப்பறை இருக்கையை ஒரு நாளில் சுமார் 200 பேர் பயன்படுத்தும் நிலையிருப்பதால் சுத்தப்படுத்தும் பணியில் தீயணைப்புப் படை வீரர்களை மகாராஷ்டிர அரசு ஈடுபடுத்துகிறது.
இந்தத் தகவலை ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் மகாராஷ்டிர மாநில நல்வாழ்வுத் துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.
மும்பை மாநகரில் மக்கள் மிகவும் நெருக்கமாக வாழும் பகுதிகளில் பொதுக் கழிப்பிடங்களைச் சுத்தம் செய்யும் பணி சவால் மிகுந்ததாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார் டோப்.
இதனால், இதுபோன்ற பொதுக் கழிப்பிடங்களை ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை ஜெட் பம்ப்களின் உதவியுடன் சுத்தப்படுத்துவதற்காகத் தீயணைப்புப் படையினரை நிறுத்தியுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தவிர, நெருக்கமான பகுதிகளில் வாழும் மக்கள், வீடுகளுக்குள்ளேயே இருப்பதும் மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது. ஏனெனில், 10 அடிக்குப் 10 அடி அறையொன்றில் 15 பேர் வரையிலும்கூட தங்கியிருக்கிறார்கள். எனவே, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வசதியாக இவர்கள் அனைவரையும் பள்ளிகளில் தங்க வைப்பது பற்றி அரசு சிந்தித்து வருகிறது என்றும் குறிப்பிட்டார் ராஜேஷ்.
மகாராஷ்டிரத்தில் இதுவரை கரோனா நோய்த் தொற்றால் 1,346 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மும்பையில் இருக்கிறார்கள்.
மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதிகளில் ஊரடங்கைக் கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்காக மாநில கூடுதல் காவல்படையினரை நிறுத்தவும் அரசு திட்டமிட்டு வருகிறது.
மும்பையில் பெருமளவில் தமிழர்கள் வாழும் ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் மட்டும் கரோனா தொற்றால் இதுவரையில் மூவர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.