புதுச்சேரி: கள்ளத்தனமாக மது விற்றால் காவல்நிலைய அதிகாரியிடம் விசாரணை நடத்தப்படும் என புதுவை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.
கள்ளத்தனமாக மது விற்பனை தொடர்பான புகார்கள் அதிகளவில் வருவதை அடுத்து புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிறப்பித்த உத்தரவு வருமாறு:
புதுவை மாநிலத்தில் கள்ளத்தனமாக மது விற்பனை நடந்தால், அந்த விற்பனை நடந்த காவல்நிலைய அதிகாரி காணொலி காட்சியில் விசாரிக்கப்படுவார். இந்த விசாரணையில் துணை நிலை ஆளுநர், டிஜிபி, ஐஜி, முதுநிலை எஸ்பி ஆகியோர் ஈடுபடுவோம். இந்த நடைமுறை திங்கள் முதல் நடைமுறைக்கு வரும் என்றார்.
கள்ளச்சந்தையில் மதுவிற்பனை தொடர்பாக கலால்துறையும், காவல்துறையும் மாறி மாறி புகார் கூறிகொள்கின்றனர். கள்ளச்சந்தையில் மது விற்றால் கண்டறிவதுதான் காவல்துறையினரின் பணி. கள்ளச்சந்தையில் மது விற்பனைக்கு காரணம் காவல்துறையும் கவனக்குறைவுதான். அதை ஏற்கவே முடியாது.
காவல்துறையினரிடம் விசாரிப்பது போல், கலால்துறையினரையும் தலைமைச்செயலர், துறைச்செயலருடன் விசாரிக்க உள்ளேன் என கட்செவி அஞ்சலில் அவர் வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.