கரோனா நோய்த் தொற்றுக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 9 பேர் இன்று, வியாழக்கிழமை வீடு திரும்பினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் கடந்த 10 ஆம் தேதி 70 வயது மூதாட்டி உயிரிழந்தார்.
பாதிக்கப்பட்டவர்களில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 9 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பினர்.
அவர்களுக்கு பழங்கள் மற்றும் பொருள்கள் கொடுத்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வழியனுப்பிவைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதன் மூலம் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 5 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருநெல்வேலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 2 பேர் ஏற்கனவே வீடு திரும்பி உள்ளனர்.