திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் பெண் உள்பட மேலும் இரண்டு பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டது. இதன் மூலமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 112ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். மேலும், காய்ச்சல், சளி போன்ற கரோனா நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால் அவர்களைத் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.
இதில், கடந்த சனிக்கிழமை வரையில் கரோனா நோய்த் தொற்றால் திருப்பூர் மாவட்டத்தில் 110 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், திருப்பூர் புரோக்கர் தெருவில் வசித்து வந்த 40 வயது ஆண், 22 வயது பெண் ஆகியோருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் கோவை, இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 59 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.