கர்நாடகம்: வெள்ள பாதிப்பிற்கு ரூ.50 கோடி நிதி: தேவைப்பட்டால் மேலும் நிதி வழங்கப்படும்
By DIN | Published On : 06th August 2020 02:41 PM | Last Updated : 06th August 2020 02:41 PM | அ+அ அ- |

வெள்ள பாதிப்பிற்கு ரூ.50 கோடி நிதி: தேவைப்பட்டால் மேலும் நிதி வழங்கப்படும்
பெங்களூரு: கர்நாடகத்தில் பெய்து வரும் தொடர் மழைக்காக ஏற்கனவே ரூ.50 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தேவை ஏற்பட்டால் மேலும் நிதி ஒதுக்கப்படும் என்று முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கர்நாடகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. பருவமழை காரணமாக சிக்மகளூர் பகுதியில் நிலச்சரிவும் ஏற்பட்டது.
மேலும், உடுப்பி, தட்சிண கன்னடம், உத்தர கன்னடம், சிக்மகளூர், சிவமோகா, குடகு மற்றும் ஹாசன் ஆகிய பகுதிகளுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குடகு மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி காவிரி நீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் காவிரி ஆற்றங்கரையையொட்டிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால், மாவட்ட நிர்வாகிகள் வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தி மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் எடியூரப்பா அறிவுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே நிவாரணப் பணிகளுக்காக ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தேவை ஏற்பட்டால் மேலும் நிதி ஒதுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.