சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அதிமுகவின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அப்போது பேசிய தமிழக முதல்வரும், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, “முதல்வராக நான் இருக்கலாம். ஒ.பன்னீர்செல்வம் இருக்கலாம். நாளை தொண்டர் ஒருவரும் முதல்வராக இருக்க முடியும். தொண்டன் முதல்வராக இருக்கக்கூடிய கட்சி அதிமுக மட்டுமே” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “சிலர் அதிமுகவை உடைக்க நினைத்தாலும் அந்த முயற்சிகள் தவிடுபொடியாகின. எதிரிகளும் உச்சரிக்கும் பெயராக எம்.ஜி.ஆர். பெயர் உள்ளது” எனக் குறிப்பிட்டார்.
கரோனா தொற்று காலத்திலும் அதிக முதலீடுகளை ஈர்த்தது தமிழகம் மட்டும் தான். நாட்டிலேயே அதிக தேசிய விருதுகளை வென்ற ஒரே மாநிலமாக தமிழகம் தான் உள்ளது என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
மேலும் அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் எனத் தெரிவித்த அவர் 30 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த ஒரே கட்சி அதிமுக மட்டுமே என தனது பரப்புரையில் குறிப்பிட்டார்.