ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை சேர்ந்த ராஜா தாக்கல் செய்த மனுவில் என் தந்தை சாத்தையா அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் 8 வது வார்டு திருவரங்கத்தில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில் ஜனவரி 3 ஆம் தேதி காலை 5 மணியளவில் நண்பர்களை சந்திப்பதற்காக வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவர் அதிமுகவைச் சேர்ந்த தர்மர் உள்ளிட்டோர் அவர்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக தெரியவந்துள்ளது. காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
அதிமுகவினரின் கட்டுப்பாட்டில் உள்ள எனது தந்தையை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ராஜா,புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரரின் தந்தையான திமுக கவுன்சிலரை நாளை நேரில் ஆஜர்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.