ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் 2-வது கட்டமாக கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 1,100 பேருக்கு கரோனா நோய்த் தொற்றை அறிய பரிசோதனைகள் செய்யப்பட்டன.
ஈரோட்டில் கடந்த மூன்று நாள்களாக கரோனாவின் தாக்கம் கடுமையாக உள்ளது. குறிப்பாக ஈரோடு மாநகர் பகுதியில் நாளுக்கு நாள் கரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
எனவே இதனைத் தடுக்கும் வகையில் ஈரோடு மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி உடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே ஈரோடு ராஜாஜிபுரம், அகத்தியர் வீதி. கண்ணகி வீதி. திருநகர் காலனி, சம்பத் நகர், பெரியார் நகர் போன்ற பகுதிகளில் ஒரு சில தெருக்கள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, ராஜாஜிபுரத்தில் 500 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுத் தீவிர கண்காணிப்பில் உள்ளன. கருங்கல்பாளையம் ராஜாஜிபுரத்தைப் பொருத்தவரை இங்கு வீடுகள் குறுகிய இடத்தில் உள்ளன. இங்கு 10 நபர்களுக்கு ஏற்கெனவே தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சுகாதார பணியாளர்கள் அங்கு முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் பிசிஆர் பரிசோதனையை அதிகப்படுத்த ஆட்சியர் கதிரவன் உத்தரவிட்டு இருந்தார். இதன்படி மாநகர பகுதியில் தினமும் 400-க்கும் மேற்பட்ட பிசிஆர் பரிசோதனை நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று ஒரு நாள் மட்டும் 1100 பிசி ஆர் பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, ஈரோடு மாநகர் பகுதியில் தினமும் 400 க்கும் மேற்பட்ட பேசிய பரிசோதனை நடந்து வந்தது தற்போது பி.சி.ஆர். பரிசோதனையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதால் நேற்று ஒரே நாளில் 1100 பேருக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் ராஜாஜிபுரத்தில் நேற்று மட்டும் 700க்கும் மேற்பட்டோருக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதைப்போல் தமிழ்நாடு கூட்டுறவு நூல் பதனிடும் ஆலையில் வேலை பார்க்கும் ஒரு தொழிலாளிக்கு தொற்று ஏற்பட்டதால் நேற்று அங்கு பணிபுரியும் 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர் களுக்கு பிசிஆர் பரிசோதனை எடுக்கப்பட்டது. இதன் முடிவுகள் நாளை வெளிவரும். இதேபோல் கருங்கல்பாளையம் ராஜாஜி புறத்தில் மீதியுள்ள வீடுகளில் உள்ளவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை இன்று நடைபெறுகிறது இதற்காக 25 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன இந்தப் பகுதியில் குறுக்காக வீடுகள் அதிகம் உள்ளதால் எங்களுக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது என்றார். கடந்த வாரம் நடைபெற்ற முதல்வரின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பத்திரிகையாளர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் கதிரவன் பத்திரிகையாளர்களுக்கு கைசுத்தம் செய்யும் கிருமிநாசினி வழங்கினார்.