திருப்பூர்: திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி அருகே சாலை விபத்தில் காயமடைந்த இளைஞர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருப்பூர் எஸ்.வி.காலனி 8 ஆவது வீதியில் வசித்து வந்தவர் சந்தோஷ் வேலாயுதம்(32), இவர் பூலுவபட்டியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் மனிதவள மேலாண்மைத்துறையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு பணி முடித்து அவிநாசியில் இருந்து திருப்பூர் செல்லும் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
இவரது வாகனம் திருமுருகன்பூண்டி அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக இரு சக்கர வாகனத்தில் இருந்து சந்தோஷ் வேலாயுதம் தவறி விழுந்துள்ளார். இதில், பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திருமுருகன்பூண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த சந்தோஷ் வேலாயுதம், முன்னர் தனியார் தொலைக்காட்சியொன்றில் செய்தியாளராகப் பணியாற்றியவர்.