காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இன்று ஒரே நாளில் 366 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதியானது. காஞ்சிபுரம் நகரில் கடந்த மூன்று தினங்களாக பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வந்தன. இம்முகாம்களின் மூலம் நடந்த ரத்த பரிசோதனையின் முடிவுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரியவந்தது. இதனடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 366 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 3 ஆயிரத்து 575 பேர் பாதிக்கப்பட்டனர். 1600 பேர் குணமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சிபுரம் நகரில் நோய்த் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக பிள்ளையார் பாளையம் பகுதியில் மட்டும் 18 தெருக்கள் முழுமையாக அடைக்கப்பட்டு உள்ளது. இன்று 12ஆம் தேதி முதல் வரும் 26ஆம் தேதி வரை 14 நாட்களுக்கு தளர்வில்லாத முழு பொது முடக்கத்தை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா. பொன்னையா அறிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் நகரில் நோய்த் தொற்றால் பாதிப்பு அடைந்தவர்கள் வீடுகள் தகர அடைப்புகளால் அடைக்கப்பட்டு அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியே வராத வண்ணம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் நகரில் நோய்களின் தாக்கம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து நகராட்சி நோய்த்தடுப்பு பணிகளையும் தீவிரப்படுத்தி உள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமையன்று தளர்வில்லாத பொது முடக்கத்தை முன்னிட்டு பொதுமக்கள் வெளியில் வராமல் இருப்பார்கள் என்பதை அறிந்து ஒரே நாளில் 2.32 லட்சம் பேருக்கு கபசுரக் குடிநீர் வழங்கி வருகிறது நிர்வாகம்.