திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே திருமணமான 4 நாளில் புதுப்பெண் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்தவர் செல்வராஜ்(29), தையல் தொழிலாளியான இவருக்கும், திருப்பூரைச் சேர்ந்த ராஜூ என்பவரது மகள் தேவி(20) என்பவருக்கும் கடந்த 8 ஆம் தேதி கணியூரில் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில், தம்பதியர் இருவரும் தாராபுரம், மாருதி நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை விருந்துக்குச் சென்றுள்ளனர். அங்கு மதிய உணவுக்குப் பின்னர் தேவி தனி அறைக்குச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது தேவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து உறவினர்கள் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் தேவியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தாராபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருமணம் முடிந்து 4 நாள்கள் மட்டுமே ஆனதால் சார் ஆட்சியர் பவன்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.