சபரிமலை ஐயப்பன் மற்றும் குருவாயூர் கிருஷ்ணன் கோயில்களும், கரோனா கால முடக்கம் முடிந்து, பக்தர்கள் தரிசனத்துக்காகத் திறக்கப்படுகின்றன.
குருவாயூர் கிருஷ்ணன் கோயில் வரும் செவ்வாய்க்கிழமை தொடக்கமும், சபரிமலை ஐயப்பன் கோயில் ஜூன் 14 ஆம் தேதி மாலை 5 மணிக்கும் திறக்கப்படுகின்றன.
இந்தத் தகவலை கேரள தேவஸ்வம் துறை அமைச்சர் காடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
"குருவாயூரில் ஒரு நாளில் 600 பேர் மட்டுமே தரிசனம் செய்யலாம். முன்னதாகவே பதிவு செய்துகொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
"திருமணங்களைப் பொருத்தவரை ஒரு நாளில் 60 திருமணங்கள் அனுமதிக்கப்படும். ஒரு திருமணத்தில் பங்கேற்க 10 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
"சபரிமலையில் ஐயப்ப தரிசனம் செய்ய விரும்புவோர் அனைவரும் முன்னதாக இணையதளத்தின் (ஆன்லைனில்) மூலம் பதிவு செய்துகொள்ள வேண்டும். ஒரு மணி நேரத்தில் 200 பேர் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
"பம்பை ஆற்றில் குளிக்கவோ, கோயில் வளாகத்தில் இரவு தங்கவோ பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
"பிற மாநிலங்களிலிருந்து வரும் பக்தர்கள் அனைவரும் கரோனா நோய்த் தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழ்களுடன் வர வேண்டும்" என்றும் அமைச்சர் காடகம்பள்ளி சுரேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.