சீர்காழி: சீர்காழியில் இன்று (செவ்வாய்கிழமை) மாலை பலத்த காற்று வீசியது. இதனால் அந்த பகுதியில் உள்ள மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன.
சீர்காழி பகுதியில் மாலை கருமேகங்கள் சூழ்ந்து மழை வருவது போல் இருட்டியது. பின்னர் பலத்த காற்று வீசியதால், புழுதிகள் கிளம்பி சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். பலத்த காற்றில் கடைகளில் வைக்கப்பட்டிருந்த வெளிப்புற டிஜிட்டல் பெயர் பலகைகள் பெயர்ந்து தூக்கி விசப்பட்டன. அதேபோல் சீர்காழி அருகே மேலச்சாலை கிராமத்தில் சூறைக்காற்று வீசியதால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததில் மின்கம்பங்கள் முறிந்து விழுந்து மின்தடை ஏற்பட்டது .
முன்னதாக, கொள்ளிடம் மாங்கணாம்பட்டு, சரஸ்வதிவிளாகம், மாதிரவேளூர், கீரங்குடி, பாலுரான்படுகை, பட்டியமேடு உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று மாலை திடீரென கருமேகம் சூழ்ந்து இடியுடன் கூடிய மழை பெய்தது. கடந்த பல நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் நேற்று பெய்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து காணப்பட்டது.
ஆனால் கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் செங்கல் சூளை நடத்தி வருபவர்களுக்கு திடீரென பெய்த மழையால் சுடப்படாத பச்சைக் கல்கள் நனைந்து வீணாகியது.