அரியலூர்: அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே தொகுப்பு வீடு இடிந்து விழுந்து இருவர் பலியாகியுள்ளனர்.
உடையார்பாளையம் அருகேயுள்ள புளியங்குழி இருளர் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ்(60). கூலித்தொழிலாளியான இவர், 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அரசு வழங்கிய தொகுப்பு வீட்டை சீரமைக்க சுத்தம் செய்துள்ளார். வீட்டை சுத்தம் செய்யும் பணியில் செல்வராஜ் மகன் பாண்டியன்(29), அதே தெருவைச் சேர்ந்த அவரது மாமன் மகன் கருப்புசாமி(16) ஆகியோரும் ஈடுபட்டுள்ளனர்.
திங்கள்கிழமை இரவு எதிர்பாராத விதமாக வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில், பாண்டியனும், கருப்புசாமியும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். அருகிலிருந்தவர்கள் சுவற்றை அகற்றிவிட்டு பார்த்தபோது, மேற்கண்ட இருவரும் சடலமாக கிடந்துள்ளனர். இதனையடுத்து, இருவரது உடலும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இது குறித்து உடையார்பாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். பாண்டியனுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிய நிலையில், தற்போது அவரது மனைவி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.