கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அடுத்த வடபாதிமங்கலத்தில், பாசன வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகளை பொதுமக்கள் அகற்றினர். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் உத்தரவுப்படி, அரிச்சந்திரபுரம் ஊராட்சி பாசன வாய்க்காலில், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி மேற்கொள்ளபட்டது.
வாழாச்சேரி, கூத்தாநல்லூர் வழியாக வடபாதிமங்கலம் வரக்கூடி வெண்ணாற்றில் இருந்து, பிரிந்து செல்லக் கூடிய கிளை பாசன வாய்க்கால் அரிச்சந்திரபுரம் பாசன வாய்க்காலாகும். இந்த பாசன வாய்க்காலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அரிச்சந்திரபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் செ.சுகந்தி தலைமை வகித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உ. இளங்கோ முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் டி.சாந்தி வரவேற்றார்.
நிகழ்ச்சியில், பாசன வாய்க்காலில் குவிந்து கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள், பாட்டில்கள், பேப்பர்கள் மற்றும் குப்பைகள் உள்ளிட்டவைகளை, 100 மீட்டர் தூரத்திற்கு மக்கள் பிரதிநிதியுடன், பொதுமக்களும் இணைந்து கழிவுகளை அகற்றி சுத்தம் செய்தனர்.