கோவை: கோவையில் இருந்து அரக்கோணத்திற்கு, இன்று (வெள்ளிக்கிழமை )முதல் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. முதல் நாளில் 58 பேர் மட்டுமே ரயிலில் பயணித்தனர்.
கரோனா நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக, பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையில், நாடு முழுவதும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்ட நிலையில், கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் 4 வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கிட அனுமதி அளித்தது.
அதன்படி, கோவையில் இருந்து மயிலாடுதுறை, காட்பாடிக்கு 2 தினசரி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 12-ஆம் தேதி முதல் கோவையில் இருந்து அரக்கோணத்திற்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டு, புதன்கிழமை முதல் முன்பதிவு துவங்கியது. அதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை மாலை 3.15 மணிக்கு கோவையில் இருந்து அரக்கோணத்திற்கு சிறப்பு ரயில் ( எண்: 02676) இயக்கப்பட்டது.
அப்போது, ரயிலில் பயணிக்க 58 பேர் மட்டுமே நிலையத்திற்கு வந்திருந்தனர். 20 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலில் 1,400 பேர் பயணிக்கலாம். 58 பேர் என்பது 5 சதவீதத்திற்கும் குறைவான பயணிகளே ஆகும். சென்னைக்கு அருகாமையில் உள்ள பகுதியாக அரக்கோணம் உள்ளதால், கரோனா நோய்த் தொற்று பாதிப்பு கருதி இந்த ரயிலில் பெரும்பாலான பயணிகள் செல்ல விரும்பவில்லை என ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.