மதுரை: புதுதில்லியில் இருந்து விமானம் மூலம் கடந்த புதன்கிழமை மதுரை வந்த இந்தோ - திபெத் வீரர் சுரேந்தர்சிங் விமான நிலையத்தில் மயங்கி விழுந்தார். சுகாதாரத் துறையினர் அவருக்கு முதலுதவி அளித்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை உயரிழந்தார்.
இதையடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உடல் இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்புப் படை முகாம் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் சுரேந்தர் சிங் உடல் சொந்த ஊரான ஹரியாணா மாநிலத்திற்கு அனுப்பி வைத்தனர்.
முன்னதாக இறந்த வீரர் உடலுக்கு இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்புப் படை துணை கமாண்டன்ட் சதிஸ் குமார், மதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்புப் படை கமாண்டண்ட் சனிஸ், மதுரை விமான நிலைய இயக்குனர் செந்தில்வளவன் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.