சிதம்பரம்: பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் வருகிற ஜூன் 19-ம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது. ஊரடங்கை முன்னிட்டு பக்தர்கள் அனுமதியின்றி கோயிலுக்குள்ளேயே திருவிழா நடத்தப்படுகிறது.
உத்சவ விபரம் வருமாறு:
ஜூன் 20 - வெள்ளி சந்திர பிறை வாகன வீதி உலா, 21-ஆம் தேதி தங்க சூரிய பிறை வாகன வீதி உலா, 22-ஆம் தேதி வெள்ளி பூதவாகன வீதி உலா, 23-ஆம் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதி உலா (தெருவடைச்சான்), 24-ஆம் தேதி வெள்ளி யானை வாகன வீதி உலா, 25-ஆம் தேதி தங்க கைலாச வாகன வீதி உலா, 26-ஆம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலாவும் நடைபெறுகிறது.
இதனையடுத்து ஜூன் 27-ஆம் தேதி சனிக்கிழமை தேர்த் திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. ஜூன் 28-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. ஜூன்.22-ஆம் தேதி திங்கள்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. உற்சவ ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.
கோயிலுக்குள்ளேயே திருவிழா:
கரோனா தொற்று பரவாமல் இருக்க தமிழக அரசின் ஊரடங்கை முன்னிட்டு கோயில் திருவிழா கோயிலுக்குள்ளேயே பொதுதீட்சிதர்களால் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அனுமதி கிடையாது என பொதுதீட்சிதர்கள் முடிவு செய்துள்ளனர். கோயிலுக்குள்ளேயே திருவிழா நடத்தப்படுவதால் தேரோட்டம், முத்துப்பல்லக்கு வீதி உலா கிடையாது என்றும், தினந்தோறும் சாமி வீதி உலா கோயில் உள் பிரகாரத்திலேயே நடைபெறும் என உ.வெங்கடேச தீட்சிதர் தெரிவித்தார்.