சீனாவுக்குத் தக்கதொரு பாடம் கற்பிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
எல்லையில் நடந்த இந்திய - சீன மோதல் தொடர்பாக இன்று காணொலி வாயிலாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவாகப் பிரதமர் மோடி பேசினார்.
"நமது எல்லைக்குள் அவர்கள் ஊடுருவவும் இல்லை, எந்த நிலையையும் அவர்கள் (சீனா) கைப்பற்றவும் இல்லை" என்று தெரிவித்த மோடி, "நமது ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் எய்தினர் என்றும் பாரத மாதாவுக்கு சவால் விடுத்தவர்களுக்குத் தக்க பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
"நாட்டைக் காப்பாற்ற என்ன செய்ய வேண்டுமோ, ராணுவத்தை நிறுத்துவதோ, நடவடிக்கையோ அல்லது எதிர் நடவடிக்கையோ, அதை இந்தியப் படைகள் செய்துகொண்டிருப்பதாக"வும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
முன்னதாகப் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "இவ்விஷயத்தில் உளவுத் துறைத் தோல்வி எதுவுமில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.