தென்னையில் இருந்து திருப்பூர் வந்த பெண் உதவி ஆய்வாளருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரது கணவர் பணிபுரிந்த வடக்கு காவல் நிலையம் சனிக்கிழமை மூடப்பட்டது.
சென்னையில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் உதவி ஆய்வாளராக 35 வயது பெண் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், பெண் உதவி ஆய்வாளர் கடந்த3 நாள்களுக்கு முன்பாக திருப்பூர் வந்துள்ளார். மேலும், காவல் நிலையம் அருகே உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
இதனிடையே, பெண் உதவி ஆய்வாளருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர்கள் வசித்து வந்த காவலர் குடியிருப்பு, கணவர் பணியாற்றி வரும் திருப்பூர் வடக்கு காவல் நிலையம் ஆகிய பகுதிகளுக்கு மாநகராட்சி சுகாதாரப்பிரிவினர் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், திருப்பூர் வடக்கு காவல் நிலையமும் மூடப்பட்டது.
எனினும் மிக முக்கியமான வழக்குகள் மட்டும் பதிவு செய்யப்படும் என்று காவல் துறையினர் தெரிவித்தனர். அதே வேளையில், காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.