செய்யாறில் காவலருக்கு கரோனா தொற்று உறுதியானதால் காவல் நிலையம் மூடல்
செய்யாறு: செய்யாறு காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் ஒருவருக்கு நேற்று (திங்கள்கிழமை) கரோனா தொற்று உறுதியானதால், செய்யாறு காவல் நிலையம் மூன்று நாள்களுக்கு மூடப்பட்டது. மேலும் செய்யாறு சுகாதார மாவட்டத்தில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் உள்பட 4 குழந்தைகள், 8 முதியவர்கள், ஒரு காவலர் உள்ளிட்ட 64 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்று கட்டுப்படுத்தும் விதமாக வெளியூர்களில் இருந்து தங்கியவர்கள், கரோனா தொற்று உடையவர்களின் தொடர்பில் இருந்தவர்கள் என கண்டறியப்பட்ட 664 பேருக்கு ஜூன்.27 -ல் பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனை முடிவில் செய்யாறு வட்டம் சுண்டிவாக்கம் கிராமத்தில் மூன்று முதியவர்கள் உள்பட 6 பேருக்கும், பலாந்தாங்கல் கூட்டுரோடு பகுதியில் 39 வயது ஆண், பெரூங்கட்டூர் கிராமத்தில் 32 வயது பெணுக்கும், செய்யாறு நகரம் திருவோத்தூர் சன்னதி தெருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் உள்பட 5 பேருக்கும், குமரன் தெருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண்கள் உள்பட 5 பேருக்கும், வெங்கடேஸ்வரா நகரில் 9 வயது குழந்தைக்கும், 60 வயது மூதாட்டிக்கும், கொடநகர் அரசமரத்தெருவில் இரு இளைஞர்களுக்கும், செய்யாறு காவல் நிலையத்தில் பணியாற்றும் 34 வயதுள்ள காவலருக்கும், முனுசாமி தெருவில் 45 வயதுடைய வியாபாரி உள்ளிட்ட 32 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானது.
வந்தவாசி வட்டத்தில் தேசூர், கீழ்கொடுங்காலூர் மற்றும் நகரப்பகுதிகளான கெஜலட்சுமி நகர், கைகேயி அம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் 5 பெண்கள் உள்பட 19 பேருக்கும், ஆரணி வட்டத்தில் எஸ்.வி.நகரம், முள்ளிப்பட்டு, சைதாப்பேட்டை, ஆரணி பாளையம், நேத்தப்பாக்கம், லாடவரம் ஆகிய பகுதிகளில் 13 வயது சிறுமி உள்பட 13 பேருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
செய்யாறு சுகாதார மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் செய்யாறு, ஆரணி, திருவண்ணாமலை ஆகிய அரசு மருத்துவமனைகளிலும், செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரி சிறப்பு கரோனா சிகிச்சை மையம், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். கரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத் துறையினர் முழு வீச்சில் சுகாதாரப்பணிகள் மேற்கொண்டு உள்ளனர்.
செய்யாறு காவல் நிலையம் மூடல்:
செய்யாறு காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மூன்று நாள்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டது. தொற்றின் காரணமாக செய்யாறு காவல் நிலையம் முழுவதும் திருவத்திபுரம் நகராட்சி பணியாளர்கள் கிருமிநாசினியை தெளித்து சுத்தம் செய்தனர். இந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் மற்றும் செய்யாறு டி.எஸ்.பி அலுவலகத்தில் பணியாற்றும் காவலர் உள்பட 52 பேரின் பரிசோதனைக்காக சளி மாதிரி சேகரிக்கப்பட்டது.
செய்யாறு காவல் நிலையத்தில் புகார் அளிக்க வருபவர்கள் அக்கட்டடத்தில் வைக்கப்பட்டு உள்ள புகார் பெட்டியில் புகார் மனுக்களை போடலாம். தற்காலிகமாக செய்யாறு காவல் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள போக்குவரத்து காவல் நிலையப்பகுதியில் செயல்படத் தொடங்கியது.