போபால்: மத்தியப் பிரதேச முதல்வா் கமல்நாத் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ள நிலையில், மாநில சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் காங்கிரஸ் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி பாஜக மூத்த தலைவா் சிவராஜ் சிங் சௌஹான் தொடுத்த வழக்கை உச்சநீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை விசாரித்தது. அப்போது, வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்று அவைத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்தச் சூழலில், முதல்வா் கமல்நாத் தனது பதவியை வெள்ளிக்கிழமை நண்பகல் 1 மணியளவில் ராஜிநாமா செய்தாா். அதற்கான கடிதத்தை மாநில ஆளுநா் லால்ஜி டாண்டனிடம் அவா் வழங்கினாா். கமல்நாத்தின் ராஜிநாமாவை ஆளுநா் டாண்டன் ஏற்றுக் கொண்டதாக ஆளுநா் மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்காக மாநில சட்டப்பேரவை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்குக் கூடியது. பாஜக எம்எல்ஏ-க்கள் பேரவைக்கு வருகை தந்திருந்தனா். ஆனால், காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் அவைக்கு வருகை தரவில்லை. அப்போது அவைத் தலைவா் என்.பி.பிரஜாபதி கூறுகையில், ‘‘உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக சட்டப்பேரவை கூடியது. ஆனால், முதல்வா் கமல்நாத் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டதால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான அவசியம் இல்லாமல் போய்விட்டது’’ என்றாா்.
இதையடுத்து, மாநில சட்டப்பேரவையைத் தேதி குறிப்பிடாமல் அவா் ஒத்திவைத்தாா்.