சமூக ஊடகங்களில் பெரும்பாலும் உண்மைச் செய்திகளைவிடத் தவறான அல்லது பொய்யான தகவல்கள்தான் வெகு வேகமாகப் பரவுகின்றன. அப்படியொரு தகவல்கள் அமெரிக்காவில் கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுவதும்.
அமெரிக்காவின் ரோச் மருத்துவ நிறுவனத்தின் விஞ்ஞானிகள் சாதனை, கொரோனா தடுப்பூசி தயார், ஊசி போட்ட மூன்று மணி நேரத்தில் கொரோனாவைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது, வரும் ஞாயிறு (அது எந்த ஞாயிறு என்று ஃபார்வர்ட் செய்யும் யாருக்கும் தெரியாது) முதல் உலகெங்கும் விற்பனை செய்யப்பட இருப்பதாக ரோச் நிறுவனம் அறிவித்து உள்ளது என்பதுதான் பரப்பப்படும் அந்தத் தகவல்.
உலகம் முழுவதும் கரோனா தொற்று பரவி மக்களை உயிர்ப் பயத்தில் ஒளியச் செய்துகொண்டிருக்கும் நிலையில், எந்த மருந்தைத் தின்றால், எதைச் செலுத்தினால் தப்பிக்கலாம் என்று தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், உலகின் மிகப் பெரிய மருந்து நிறுவனங்களில் ஒன்றான ரோச், கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்திருப்பதான தகவல் பெருந்தீயைப் போல பரப்பப்படுகிறது. இதனுடன் ஒரு விடியோ பதிவும் வலம் வருகிறது.
உள்ளபடியே டிரம்ப் ஒருபோதும் ரோச் நிறுவனத்தால் அடுத்த ஞாயிற்றுக்கிழமை மருந்து வெளியிடப்படும் என்று சொல்லவில்லை. என்.பி.சி. செய்தியின் இந்த ஒளிநறுக்கில் கரோனா வைரஸ் சோதனைகளுக்கு அனுமதியளித்ததற்காக உணவு மற்றும் மருந்துகள் அமைப்புக்கு (எப்டிஏ) ரோச் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலரான மேட் சாஸ் நன்றிதான் தெரிவிக்கிறார்.
இந்த நிறுவனத்துக்கு கரோனா வைரஸ் சோதனைகளுக்குத்தான் அவசரகால அனுமதியளிக்கப்பட்டுள்ளதே தவிர மருந்துக்காக அல்ல.
இதை முதன்முதலில் வெளியிட்டவர்கள் அகற்றிவிட்டிருக்கின்றனர். ஆனால், விவரம் அறியாமல் அதைக் கடமையாகப் பலர் பரப்பிக் கொண்டிருக்கின்றனர். சுற்றுக்குவிடாமல் உடனடியாக அகற்றப்பட வேண்டிய தகவல் இது.
கரோனா செய்திகள்: