உத்தமபாளையம் அருகே பல்லவராயன்பட்டியில் மதுக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு ஊரடங்கையொட்டி மாநிலத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன
இந்த நிலையில் கரோனா தொற்று இல்லாத பகுதிகளில் மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, உத்தமபாளையம் அருகே பல்லவராயன்பட்டியில் வியாழக்கிழமை டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.
பல்லவராயன்பட்டி, பண்ணைப்புரம், கோம்பை, உத்தமபாளையம், மார்க்கையன்கோட்டை, சின்னமனூர், குச்சனூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான குடிப் பழக்கத்தினர் குவிந்தனர்.
இரண்டாம் நாளான இன்றும் டாஸ்மாக் கடை திறக்கும் முன்பே மதுபாட்டில்கள் வாங்க குவிந்திருந்தனர். இதனை அறிந்த இந்தப் பகுதி பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி கூட்டம் கூட்டமாக ஆயிரக்கணக்கானோர் குவிந்து வருவதால் கரோனா தோற்று பரவ வாய்ப்பு இருப்பதாக கூறி டாஸ்மாக் கடையைத் திறக்கக் கூடாது என டாஸ்மாக் கடை முன்பாக அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற தேவாரம் காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் சமூக இடைவெளி பின்பற்றி மது பாட்டில்கள் விநியோகம் செய்யப்படும் என்றும் இதன் மூலம் நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், சுமார் ஒரு மணி நேரம் கால தாமதத்துடன் டாஸ்மாக் கடை இரண்டாவது நாளாக செயல்படத் தொடங்கியது. குடிப்பவர்களின் வருகை வழக்கம்போல் அதிகமாக இருப்பதால் காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புக்கு இடையே மதுபாட்டில்கள் வினியோகம் செய்யப்படுகின்றன.