வெளி மாநிலத்திலிருந்து திரும்பிய நிலையில் தனிமை மையத்துக்குச் செல்லுமாறு பெற்றோர் கூறியதால் விரக்தியுற்ற புலம்பெயர் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
ஜார்க்கண்ட் மாநிலம் பன்வாரி அருகேயுள்ள ஹாத்தோஹர் கிராமத்தைச் சேர்ந்தவர் முகேஷ் குமார், வயது 19. புலம்பெயர்ந்து மகாராஷ்டிரத்திலுள்ள ஷோலாபூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
கரோனா ஊரடங்கால் வேலையில்லாமல் போய்விடவே, ஏறத்தாழ 1,700 கி.மீ. தொலைவு ஏதேதோ வாகனங்களைப் பிடித்துப் பயணம் செய்து செவ்வாய்க்கிழமை காலையில் சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தார்.
அதிகாலையில் வீட்டுக்கு வந்ததும், முகேஷ் குமாரை அருகே சுமார் 2 கி.மீ. தொலைவிலுள்ள தனிமைப்படுத்தல் மையத்துக்குச் செல்லுமாறு அவருடைய பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் வெறுத்துப் போன முகேஷ் குமார், வெளியே புறப்பட்டுப் போய், வீட்டுக்கு வெளியே ஒரு மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
"ஷோலாப்பூரிலிருந்து ஒரு நண்பனுடன் என்னுடைய மகன் ஊருக்குத் திரும்பிவந்தான். முதலில் குளித்துவிட்டு, புலம்பெயர் தொழிலாளர்களுக்கான அரசின் வழிகாட்டுதலின்படி, அருகேயுள்ள தனிமைப்படுத்தல் மையத்திற்குச் சென்று சில நாள்கள் தங்கியிருந்துவிட்டு வருமாறு என் மனைவி கேட்டுக்கொண்டார்" என்கிறார் முகேஷின் தந்தை நாராயண் கௌத்.
"ஷோலாப்பூரிலுள்ள உருக்கு ஆலையில் தினக்கூலித் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தவரான முகேஷ் குமார், இதைக் கேட்டதும் எதுவும் சொல்லாமல் வீட்டை விட்டுப் புறப்பட்டுப் போய்விட்டார்.
"கொஞ்ச நேரமாக ஆளையே காணவில்லை என்றதும் என் மனைவி வெளியே சென்று அவனைத் தேடினாள். அப்போதான் வீட்டுக்கு அருகிலுள்ள ஒரு மரத்தில் அவன் தூக்கிட்டு இறந்துகிடப்பது தெரிந்தது" என்றார் கௌத்.
இவ்வளவு தொலைவு கடந்து வீட்டுக்கு வந்தால் பெற்றோரை தனிமைப்படுத்தல் மையத்தில் போய்த் தங்கச் சொல்கிறார்களே என்ற வெறுப்பில் முகேஷ் குமார் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.