அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தாமதமாகிக் கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு வாக்கும் எண்ணப்பட வேண்டும் என வலியுறுத்தி நியு யார்க் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாகச் சென்றனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் கரோனா நோய்ப் பரவல் காரணமாக இந்த முறை மிக அதிகளவில் அஞ்சல் வாக்குகள் பதிவாகியுள்ளன. அஞ்சல் வாக்குகளை அதிக அளவில் ஜோ பிடன்தான் பெற்றுவருகிறார்.
தாமதம் காரணமாக குறிப்பிட்ட கால அளவுக்குள் வாக்கு எண்ணிக்கையை முடித்துக் கொள்வது பற்றிப் பேசப்படும் நிலையில் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட வேண்டும் என்று மக்கள் போராட்டம் நடத்தத் தொடங்கியுள்ளனர்.
நீதியையும் நியாயத்தையும் ஜனநாயகத்தையும் கொண்டாடும் வகையில், நியு யார்க் நகரில் மன்ஹாட்டன் 5 ஆம் நிழற்சாலை வழி சென்ற இவர்கள் வாஷிங்டன் சதுக்கத்தை நோக்கிச் சென்றனர்.
மிச்சிகன் மற்றும் பென்சில்வேனியா மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்துவதற்காக வழக்குத் தொடுக்கப் போவதாக டிரம்ப் அணி அறிவித்த நிலையில் இந்தப் போராட்டம் தொடங்கியது.
சில இடங்களில் தீவைப்புச் சம்பவங்களும் நடைபெற்றன. சிறுசிறு வன்முறைகள் காரணமாக சுமார் 20 பேர் வரை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டபோதிலும் போராட்டம் அமைதியாகவே நடைபெறுகிறது. இது எப்போது முடிவுக்கு வரும் எனத் தெரியவில்லை.