புதுதில்லி: தில்லியில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 5,17,238 ஆக உள்ளது என்று தில்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தில்லி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 24 மணி நேரத்தில் 6,608 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 5,17,238 ஆக அதிகரித்தது. இதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பால் 118 உயிரிழந்ததால், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,159 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றில் இருந்து 8,775 பேர் குணமடைந்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,68,143 ஆக அதிகரித்தது.
தில்லியில், கரோனா மூன்றாவது அலை உள்ள நிலையில், தில்லி முழுவதும் 40,936 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 62,425 கரோனா மாதிரி சோதனைகள் பரிசோதிக்கப்பட்டதாக தில்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தில்லியில் கரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, கரோனா அறிகுறிகளுடன் இருப்பவா்களைக் கண்டறியும் வகையில், வீடுவீடாக கரோனா சோதனை மேற்கொள்ள முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த சோதனையை மேற்கொள்வதற்காக 9,500 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவும் சுமாா் 50 வீடுகளில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.
கரோனா நோய்த்தொற்று மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவும் ஆற்றலைக் கொண்டது. தொற்று பாதித்தவர் இருமல் அல்லது தும்மும்போது அவரது வாய் அல்லது மூக்கில் இருந்து சிறிய திரவத் துகள்களின் மூலம் தொற்று பரவுகிறது. தொற்று பாதித்தவர் மற்றொருவருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும்போதும் தொற்று பரவுகிறது.
எனவே, அனைவரும் முகக்கவசங்கள் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்து தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதில் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தில்லியில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறுபவா்கள், சமூக விலக்கலைக் கடைப்பிடிக்க தவறுபவா்கள், பான் குட்கா ஆகியவற்றை பொது இடங்களில் பயன்படுத்துபவா்களுக்கும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கும் வகையில் இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.