செங்கல்பட்டில் ரௌடி வெட்டிக் கொலை: தொடர் கொலைகளால் மக்கள் அச்சம்

செங்கல்பட்டில் ரௌடி ஒருவர், அடையாளந் தெரியாத நபர்களால் ஓடஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
கொலையுண்ட ரவுடி விமல்
கொலையுண்ட ரவுடி விமல்



செங்கல்பட்டு: செங்கல்பட்டில் ரௌடி ஒருவர், அடையாளந் தெரியாத நபர்களால் ஓடஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு - காஞ்சிபுரம் நெடுஞ்சாலை அன்னை அஞ்சுகம் பகுதியைச் சேர்ந்தவர் விமல் என்கின்ற குள்ள விமல் (38). இவர் மீது செங்கல்பட்டு காவல் நிலையத்தில் 2 கொலை வழக்குகள், பல்வேறு கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு 11 மணி அளவில் வீட்டிலிருந்து வெளியே வந்த விமலை இருசக்கர வாகனத்தில் அவர் வீட்டின் அருகில் காத்திருந்த மர்ம நபர்கள் ஓடஓட விரட்டி சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பினர்.

இதனைக் கண்டு கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது கொலையுண்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார் குள்ள விமல். இதுகுறித்து செங்கல்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் உள்ளிட்ட காவலர்கள் கொலையுண்டு கிடந்த விமலின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து செங்கல்பட்டு நகர காவலர்கள் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய 5 பேர் கொண்ட கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து கொலைகள் நடந்து வருவதால்  மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இந்த மாதத்திலேயே செங்கல்பட்டில் 3 கொலைகள், மறைமலை நகரில் 2 கொலை, சதுரங்கப்பட்டினம் கொலை என பல்வேறு இடங்களில் கொலை நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com