திருவாடானை: திருவாடானை வட்டாரம் ஆண்டாவூரணி கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நிலைக்குத் தக்கவாறு வளர்ச்சி இயக்கம் என்ற தலைப்பில் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு சனிக்கிழமை பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராகவன் தலைமையில் வகித்தார். முன்னதாக வேளாண்மை உதவி இயக்குநர் கருப்பையா கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்று பேசினார்.
வேளாண்மை அறிவியல் நிலையம் குயவன்குடியைச் சேர்ந்த மண்ணியல் மற்றும் பயிர் அறிவியல் துறை உதவிப் பேராசிரியர்கள் முனைவர் பாலாஜி முனைவர் அருணாச்சலம் மற்றும் ஸ்ரீதர் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் திட்டத்தின் மாவட்ட ஆலோசகர் ராமநாதபுரம் ஆகியோர் பயிற்சியில் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு மானாவாரியில் எண்ணெய் வித்து பயிர்கள் பயறுவகைப் பயிர்கள் மற்றும் சிறுதானிய பயிர்களை மாற்றுப் பயிராக சாகுபடி செய்வது மற்றும் மண்ணின் தன்மைக்கு ஏற்றவாறு உரமிடுவது குறைந்த கால ரகங்களை சாகுபடி செய்வது குறித்து விளக்க உரை ஆற்றினார்கள்.
வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராகவன் பேசுகையில், விவசாயிகள் பயிர் சுழற்சி முறையை கையாள வேண்டும். உயிர் உரங்களை பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து கூறினார்.
இறுதியில் திருவாடானை வேளாண்மை உதவி இயக்குநர் கருப்பையா பேசுகையில், விவசாயிகள் மானாவாரிக்கு கேற்றவாறு குறைந்த காலப் பயிர்களை பயிரிடுதல், வறட்சியை தாங்கி வளர்வதற்கு பூசா ஹைட்ரோஜெல் பயன்படுத்தும் முறை மற்றும் அதன் பயன்கள், பயிர் காப்பீடு செய்வது மற்றும் விவசாய செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை குறித்து விவசாயிகளிடையே விரிவாகக் கூறினார்.
பயிற்சி ஏற்பாடுகளை பானுமதி வட்டார தொழில்நுட்ப மேலாளர் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் த.வேல்முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.