நாமக்கல்: மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2020- 21 ஆம் ஆண்டிற்கான கரும்பு அரைவை சனிக்கிழமை தொடங்கியது.
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் கரும்பு அரைவை தொடங்குவது வழக்கம். அதன்படி நிகழாண்டில் கரும்பு அரைவையானது சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு தொடங்கியது.
கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தலைவர் சுரேஷ்குமார், ஆலையின் மேலாண் இயக்குனர் விஜய் பாபு ஆகியோர் இயந்திரத்தில் கரும்பை கொட்டி தொடங்கி வைத்தனர்.
இந்த அரைவைப் பருவத்தில் சுமார் ஒரு லட்சம் டன் கரும்பு அரைவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக 930 ஏக்கர் நடவு கரும்பும், 2009 ஏக்கர் கட்டைக் கரும்பும் என மொத்தம் 2939 ஏக்கர் ஆலை அரைவைக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கரும்பு அரைவை பருவத்தில் வறட்சியின் காரணமாக 1.08 லட்சம் டன்கள் மட்டுமே கரும்பு அரைவை செய்யப்பட்டது. நடப்பாண்டில் ஒரு லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.