சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழகத்தில் உள்ள பல தொகுதிகளில் அரசியல் நெறிமுறைகளுக்கு மாறாக அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகள் நடந்து கொண்டன.
தமிழகத்தில் தேர்தல் ஆணையம் என்பது ஒன்று இருப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. அவர்கள் பெயரளவுக்கே உள்ளனர். ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதியில் வாக்காளர்களுக்கு அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் பணம் வழங்கி உள்ளனர். இதை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. தமிழகத்தில் பல தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை முழுமையாக நிறுத்த வேண்டும். உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொண்ட குழு அமைத்து தமிழகத்தில் உரிய ஆய்வு செய்து அதற்கு பிறகே வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் என கிருஷ்ணசாமி தெரிவித்திருந்தார்.
மேலும் கரோனா நோய்த்தொற்று மிக வேகமாகப் பரவி வரும் நிலையில் மே 2 ஆம் தேதியன்று நடைபெற இருக்கக்கூடிய தேர்தல் வாக்கு எண்ணிக்கையைத் தள்ளி வைக்கலாம். அதற்கான நடவடிக்கைகளை அரசும் தேர்தல் ஆணையமும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இதுதொாடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரிய கிருஷ்ணசாமி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் அற்ப காரணங்களுடன் இனி இது போன்று வழக்கு தொடர்வதை கிருஷ்ணசாமி தவிர்க்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.