கம்பம்: தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக கேரள எல்லைப் பகுதியில் அதிக அளவு தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற வாகனங்களை போலீசார் வெள்ளிக்கிழமை திருப்பி அனுப்பினர்.
தற்போது கேரளம் மாநிலம் மற்றும் தேனி மாவட்ட பகுதிகளில் கரோனா தொற்று அதிக அளவு பரவி வருகிறது. இது தொடர்பாக இடுக்கி மாவட்ட ஆட்சியர் தினேஷன், தேனி மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி ஆகியோர் ஆலோசனையின் போது, கரோனா பரவலை தடுக்க எல்லைப்பகுதியை தீவிரமாக கண்காணிக்க முடிவு செய்தனர்.
அதன் பேரில் வெள்ளிக்கிழமை கம்பமெட்டு மற்றும் குமுளி மலைச்சாலையில் காவல் துணைக்கண்காணிப்பாளர் நா.சின்னக்கண்ணு, ஆய்வாளர்கள் கே.சிலைமணி, என்.எஸ்.கீதா, கூடலூர் ஜேம்ஸ்ஜெயராஜ், வாகன ஆய்வாளர் வை.மனோகரன் மற்றும் காவல்துறை, போக்குவரத்து துறை, வருவாய்த்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஏலத்தோட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் கேரளாவுக்கு செல்ல ஜீப் வாகனத்தில் 12-க்கும் அதிகமானோர் பயணம் செய்தனர். இவர்களை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி ஓட்டுநர் மற்றும் 4 பேர் மட்டும் செல்ல அனுமதித்தனர். மற்றவர்களை திருப்பி அனுப்பினர். இதனால் இரண்டு எல்லைப்பகுதிகளிலும் 500-க்கும் மேலான ஜீப் வாகனங்கள் கேரளாவுக்குள் செல்லாமல் திரும்பி சென்றன.
இது பற்றி காவல் துணைக்கண்காணிப்பாளர் நா.சின்னக்கண்ணு கூறுகையில், வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கேரளத்தில் பொதுமுடக்கம் உள்ளது, இதனால் திங்கள்கிழமை மீண்டும் கண்காணிப்பு சோதனை தொடரும், அதிக அளவு ஆள்களை ஏற்றிச்சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.