தமிழகத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட முன்களப் பணியாளர்களில் 37 சதவிகிதத்தினர் மட்டுமே இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதார முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டில் முதல்தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட முன்களப் பணியாளர்கள் இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும் எனத் தெரிவித்தார்.
மாநிலத்தில் இதுவரை மொத்தம் உள்ள முன்களப் பணியாளர்களில் 80 சதவிகிதத்தினர் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாகவும் அவர்களில் 37 சதவிகிதத்தினர் மட்டுமே இரண்டாவது தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் அடையாளம் காணப்பட்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நாட்டில் பிற மாநிலங்களைக் காட்டிலும், தமிழ்நாட்டில் அதிக கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் இதுவரை 1.39 லட்சம் பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.