தில்லி டிராக்டர் பேரணியின் போது நடந்த வன்முறையில் ஈடுபட்ட 122 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் விவசாயிகள் குடியரசு தினத்தன்று நடத்திய டிராக்டர் பேரணியில் ஆங்காங்கே வன்முறை வெடித்ததால் தலைநகர் தில்லி போர்க்களமாக மாறியது. காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறி சென்றதால் காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் விவசாயிகளின் பேரணியை கலைக்க முற்பட்டனர். இதில் இரு தரப்பை சேர்ந்த பலர் காயமடைந்தனர்.
இதை தொடர்ந்து விடியோ ஆதாரங்களை கைப்பற்றிய தில்லி காவல்துறை, வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து கைது செய்து வருகின்றனர்.
இதுகுறித்து தில்லி காவல்துறை அதிகாரி ஈஷ் சிங்கால் கூறியதாவது,
விவசாயிகள் போராட்டம் தொடர்பாக இதுவரை 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 122 பேரை கைது செய்துள்ளோம். இது தொடர்பான தகவல்களை இணையதளத்தில் பதிவிட்டுள்ளோம், யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். காவல்துறை யாரையும் சட்ட விரோதமாக கைது செய்யவில்லை. வதந்திகளை நம்பவேண்டாம் என்று மக்களை கேட்டுக் கொள்வாதாக தெரிவித்தார்.