வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தமிழக அரசு உடனடி தீர்வு காண வேண்டுமென சிபிஐ(எம்) கட்சியின் தமிழ் மாநிலக் குழு வலியுறுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம், திட்டமிட்டபடி வியாழக்கிழமை (பிப்.25) தொடங்கியது.
போக்குவரத்து ஊழியர்களுக்கு 19 மாத காலமாக நிலுவையில் உள்ள ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்தி வேண்டும். ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 வருட காலமாக வழங்க வேண்டிய பஞ்சப் படியையும், ஓய்வூதிய கால பலன்களையும் உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஏழை, எளிய மக்களுக்காக சேவைபுரியும் போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டுமெனவும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து சங்க தலைவர்களையும் உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.;