தில்லியில் தீவிரமடையும் விவசாயிகள் பேரணி: இணையதள சேவைகள் துண்டிப்பு

தில்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாய சங்கத்தினர் நடத்திய பேரணி தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து பெரும்பாலான இடங்களில் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
தில்லியில் விவசாயிகள் போராட்டம்: இணையதள சேவைகள் துண்டிப்பு
தில்லியில் விவசாயிகள் போராட்டம்: இணையதள சேவைகள் துண்டிப்பு

தில்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாய சங்கத்தினர் நடத்திய பேரணி தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து பெரும்பாலான இடங்களில் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் தில்லியில் விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 60 நாள்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இந்நிலையில் குடியரசு தினமான இன்று தில்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

செவ்வாய்க்கிழமை காலை முதல் காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறி தில்லி எல்லைகளில் இருந்து விவசாயிகள் தில்லிக்குள் நுழைந்து வருகின்றனர். சுமார் 500 டிராக்டர்களுடன் தில்லி செங்கோட்டை பகுதிக்குள் நுழைந்துள்ள அவர்கள் செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர். செங்கோட்டையில் உள்ள சிறிய கோபுரத்தில் விவசாய சங்கங்களின் கொடிகளை ஏற்றினர். 

தில்லியில் பல்வேறு இடங்களில் நுழைந்த விவசாயிகள் மீது காவல்துறை தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடுத்து வருகிறது. குடியரசு தினத்தையொட்டி, முக்கிய பகுதிகளில் நுழையக்கூடாது என்று காவல்துறை கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ஆனால், தடுப்புகளை மீறி விவசாயிகள் தற்போது தில்லி செங்கோட்டை பகுதியை அடைந்துள்ளனர்.

இந்நிலையில் டிராக்டர் பேரணி தீவிரமடைந்துள்ள நிலையில் தலைநகர் தில்லியின் பல்வேறு இடங்களில் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைவதைத் தடுக்கும் வகையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வரை இணையதள சேவைகளை துண்டித்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com