வேளாண் பொருள்களுக்கு சிறந்த விலை, விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கடன் உதவி அவசியம்: வெங்கையா நாயுடு 

நாட்டில் நிலையான விவசாயத்தை அடைய வேளாண் உற்பத்தி பொருள்களுக்கு சிறந்த விலைகளை நிர்ணயிப்பதும், விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் குறைந்த வட்டியில் கடன் உதவிகளை வழங்குவதும் அவசியம்
வேளாண் பொருள்களுக்கு சிறந்த விலை, விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கடன் உதவி அவசியம்: வெங்கையா நாயுடு 


புதுதில்லி: நாட்டில் நிலையான விவசாயத்தை அடைய வேளாண் உற்பத்தி பொருள்களுக்கு சிறந்த விலைகளை நிர்ணயிப்பதும், விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் குறைந்த வட்டியில் கடன் உதவிகளை வழங்குவதும் அவசியம் என்று குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு  கூறியுள்ளார்.

வரவிருக்கும் சர்வதேச உணவு நெருக்கடி தொடர்பாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் அறிக்கையை சுட்டிக்காட்டிய அவர்,  நமது விவசாயிகளுக்கு உரிய காலத்தில் உதவிகளை வழங்கினால், இந்தியா தன்னிறைவு அடைவது மட்டுமல்லாமல், வரும் காலங்களில் உலக நாடுகளுக்கே தேவையான உணவை நம்மால் அளிக்க முடியும்.

கரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகளுக்கு இடையேயும் கடந்த ஆண்டு உணவு தானிய உற்பத்தியை அதிகரித்தமைக்காக நமது விவசாயிகளுக்கு பாராட்டு தெரிவித்த நாயுடு, சேமிப்புக் கிடங்குகளின் திறன்களை அதிகப்படுத்துவதில் கவனம் செலுத்துவது, வேளாண் பொருள்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதில் உள்ள இடர்பாடுகளைக் களைவது, மற்றும் உணவு பதப்படுத்துதலை ஊக்குவிப்பது போன்ற துறைகளில் கவனம் செலுத்த வேண்டும். 

“குறைந்த செலவில் உற்பத்தியை அதிகரிப்பதில் விவசாயிகள் கவனம் செலுத்த வேண்டும். தண்ணீர், மின்சாரம் போன்ற நமது வளங்களை முறையாக நாம் பயன்படுத்த வேண்டும்”, என்று நாயுடு தெரிவித்தார். 

ஹைதராபாத்தில் உள்ள டாக்டர் மரி சென்னா ரெட்டி மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யலமஞ்சலி சிவாஜியின் ‘பல்லேக்கு பட்டாபிஷேகம்' என்ற புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய நாயுடு, கிராமங்களும், விவசாயமும் ஒன்றுடன் ஒன்று இணைந்திருப்பதாகவும், நமது கிராமங்களில் கிராம சுயராஜ்யத்தை உருவாக்குவதற்கு அவர்களது பிரச்னைகளை முழுமையாக நாம் தீர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு சிறந்த பலன்கள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக ஆய்வகங்கள்- விளை நிலங்களுக்கு இடையே வலுவான இணைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் யோசனை தெரிவித்தார். பருவநிலை மற்றும் வறட்சியை எதிர்கொள்ளும் விதை வகைகளை உருவாக்குமாறு விஞ்ஞானிகளை அவர் கேட்டுக்கொண்டார்.

அதிகரித்து வரும் நகர்ப்புற- கிராமப்புற பாகுபாடு குறித்து பேசிய நாயுடு, ‘நகரங்களுக்கு உணவை விநியோகிக்கும் ஆலைகளாக' மட்டுமே கிராமங்களை பார்க்கக்கூடாது என்றார். பொது சமூகம், விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து லாபகரமான விவசாயத்தை உருவாக்கி, பொருளாதார முனையங்களாக கிராமங்களை மாற்றி மகாத்மா காந்தியின் கனவான கிராம சுயராஜ்ஜியத்தை அடைவதற்கு  புதுப்பிக்கப்பட்ட தேசிய முயற்சியை மேற்கொள்ள அவர் அழைப்பு விடுத்தார்.

மக்கள் மீண்டும் விவசாய பணிகளுக்கு திருப்ப வேண்டும். கிராம மக்களுடன் இணைந்து பணியாற்றி வேளாண் பணிகளில் உள்ள நீண்டகால பிரச்னைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

வேளாண் பயன்பாட்டிற்கான கரிம பொருள்களுக்கான விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் வேளாண் உற்பத்திக்கான செலவுகளும் அதிகரித்து வருவதால், விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு திரும்பினால் நிலையான வருமானத்தை ஈட்ட முடியும். வரும்காலங்களில் விவசாயிகள் பெரிய அளவில் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள வாய்ப்பளிக்கிறது.
 
கோழிப்பண்ணை, பால் பண்ணை, மீன்வளம், தோட்டக்கலை, மீன்வளர்ப்பு போன்ற துறைகளில் விவசாயிகள் கவனம் செலுத்தினால் நல்ல வருவாய் ஈட்ட முடியும். இதுபோன்ற வேளாண் சார்ந்த பணிகளில் ஈடுபடும்போது விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகள் வெகுவாக குறையும்.

மேலும் வேளாண் பணிகளுக்கு புதிய தலைமுறையினருக்கு அழைப்பு விடுத்து பேசிய நாயுடு,  வேளாண் முன்னேற்றத்தில் ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொழில்முனைவோர், பத்திரிகைகள், ஊடகங்களின் முக்கிய பங்குகள் குறித்து நாயுடு பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com