உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இடியுடன் பலத்த மழை பெய்தது. இதில், பல்வேறு பகுதிகளில் இடி - மின்னல் தாக்கியதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகளவாக, பிரயாக்ராஜ் மாவட்டத்தில் 14 பேர் பலியாகினர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
மழையில் பலியான கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு உதவித் தொகை அளிக்கப்படும் என்றும் உத்தரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.
இதேபோல், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் ஜூலை 10ஆம் தேதி பெய்த பலத்த மழையின் போது மின்னல் தாக்கியதில் 20 பேர் உயிரிழந்தனர்.
தில்லி, மேற்கு உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அடுத்த 24 மணி நேரத்திலேயே தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலை தென்படுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.