ஆவின் பால் நிறுவனத்தில் முறைகேடு புகார் எழுந்துள்ள நிலையில் 34 உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜிக்கு தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனமான ஆவின் சார்பாக தீபாவளிக்கு இனிப்புகள் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்து இருப்பதாகவும், அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் உயர்பதவியில் அமர்த்தப்பட்டு கூட்டுக்கொள்ளையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பால்வளத்துறை அமைச்சர் நாசர், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஆவின் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து ஆவின் நிறுவனங்களில் முறைகேடு நடந்து இருப்பதாக அவர் தெரிவித்து இருந்தார். இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், ஆவின் வர்த்தகப் பிரிவு பொது மேலாளர்களாக இருந்த ரமேஷ் குமார், புகழேந்தி, முத்துக்குமரன், அன்பு மணி, வசந்த் குமார், செல்வம், முருகன், செம்பருத்தி உள்ளிட்ட 34 உயரதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை ஆவின் நிர்வாக இயக்குநர் கந்தசாமி பிறப்பித்து உள்ளார்