திருச்சியில் சாதியைக் குறிப்பிட்டு கர்ப்பிணியை எட்டி உதைத்த இருவரை எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர்.
திருச்சி இலைக்காடிவிடுதி பகுதியைச் சேர்ந்த தம்பதி கடந்த 24ஆம் தேதி தங்களது 2 குழந்தைகளுடன் கரம்பகுடி மருத்துவமனைக்கு சென்று வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது மதுபோதையில் அவ்வழியாக வந்த இருவர் அவர்களை வழிமறித்து தகாத வார்த்தையில் பேசியுள்ளதாகத் தெரிகிறது. அப்போது 32 வயதான கர்ப்பிணியான பெண்ணின் மீது எச்சில் துப்பி அநாகரிகமாக நடந்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பெண்ணின் கணவர் அவர்களை தடுக்க முயன்றபோது அவரின் சாதியைக் குறிப்பிட்டு எச்சில் துப்பி தகாத முறையில் நடந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து கூச்சலிட்ட கர்ப்பிணியான அப்பெண்ணை காலால் உதைத்து தள்ளியதில் அப்பெண்ணும் அவரது குழந்தைகளும் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கரம்பக்குடி காவல்நிலையில் புகாரளித்தனர்.
இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய தாமதித்ததால் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் தம்பதியினர் புகாரளித்தனர்.
அதனைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் மதுபோதையில் சாதியைக் குறிப்பிட்டு பேசிய இருவர் மீதும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.